முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்காத தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் உதவித்தொகை குறித்து தனியார் பள்ளிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், தனியார் கல்லூரி நோடல் அதிகாரிகளுடனான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உயர்கல்வி துறை அதிகாரிகள்,பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் கல்லூரி நோடல் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன்,
ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கல்லூரிகளுக்கு காலதாமதம் இல்லாமல் கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் கல்லூரி நிர்வாகிகள் ஆதி திராவிடர் மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு துன்புறுத்த கூடாது. அவர்களை தனியாக நிறுத்த கூடாது என்றும் எதுவாக இருந்தாலும் அவர்களது பெற்றோர்களை அழைத்து தெரிவிக்க வேண்டும் உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், முதுநிலை மருத்துவ கல்வி பயிலும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் பயிற்சி உதவித்தொகை 45 ஆயிரத்தை சில கல்லூரிகள் வழங்குவதில்லை என புகார் வந்துள்ள நிலையில்,அரசு உத்தரவை மீறும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments