புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் பாஜக அமைச்சர்கள்,எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி புதுச்சேரி,தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடக்கும் என அந்த அமைப்பு அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரியில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே ஊர்வலம் நடந்தது.முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் துவங்கியது.ஓய்வு பெற்ற எஸ்.பி., சண்முகசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடையில் அணி வகுத்தனர். ஊர்வலம் மகாத்மா காந்தி வீதி, அஜந்தா சிக்னல், நேரு வீதி, மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி, செஞ்சி சாலை, அரசு பொதுமருத்துவமனை, பாரதி பூங்கா வழியாக காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.
பேரணியில் பா.ஜ.க மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. உள் துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன்குமார், அசோக்பாபு எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காந்தி சிலை அருகே ஆர்.எஸ்.எஸ்., பொதுக்கூட்டம் நடந்தது.
Post Comment
No comments