மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். மன்னம்பந்தல் ஊராட்சி வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியுடன் மயிலாடுதுறை ரூரல் ஊராட்சி மற்றும் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கு இரு ஊராட்சி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் மன்னம்பந்தல், ரூரல் ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும், தமிழக அரசின் வீடு கட்டும் திட்டம் தடைபடுவதுடன் புதிய வீடு கட்டுவதற்கு நகராட்சியில் அனுமதி பெற பல லட்சங்களை செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படும், குடிநீர் வரி, காலி மனைவரி போன்ற வரிச் சுமைகளும் அதிகரிக்கும். எனவே இத்திட்டத்தை கைவிடக்கோரியும் பெரும்பாலும் இப்பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்களும் வசித்து வருவதால் இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஐயப்பன், மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். இதனிடையே மயிலாடுதுறை நகராட்சியுடன் மன்னம்பந்தல் ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பொதுமக்கள் கையொப்பமிட்ட மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய நிலையில் மன்னம்பந்தல் ஊராட்சியை சேர்ந்த வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னம்பந்தல் ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி வர்த்தகர்கள் 40க்கு மேற்பட்ட கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments